Fishermen issue
இப்போது விடுதலைப் புலிகள் இல்லாத நிலை. இப்போதைய சிக்கல் வேறுவிதமாக மாறியிருக்கிறது. இத்தனை காலமாக மீன்பிடிப்பதற்கான தடையாலும், உள்நாட்டுப் போரினாலும் அச்சமடைந்து ஒதுங்கிநின்ற இலங்கை மீனவர்கள் தற்போது மீண்டும் மீன்பிடித் தொழிலைத் தொடங்கியுள்ளனர். இலங்கைக் கடற்பரப்பில்தான் அதிக மீன்வளம் இருக்கிறது என்பதால், இந்திய மீனவர்கள் எல்லைதாண்டிப்போய், இலங்கை மீனவர்களுக்குப் போட்டியாக மீன் பிடிக்கின்றனர்.
-----------------------------------------------------------------------------------------
தமிழகத்தில் நாம் எவ்வாறு, இலங்கைக் கடற்படையின் அட்டூழியத்தைக் கண்டித்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசைக் கோருகிறோமோ அதுபோன்று, இலங்கை மீனவர்களும் தங்கள் அரசிடம் இந்திய மீனவர்களின் அத்துமீறல், மீன்கொள்ளை ஆகியவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோருகின்றனர்.
----------------------------------------------------------------------------------------------
இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு இலங்கைக் கடற்பரப்பில் எதுவரையிலும் இந்திய மீனவர்கள் சென்று மீன்பிடிக்கலாம், எத்தனை லட்சம் டன் மீன்களைப் பிடிக்கலாம், எத்தனை விசைப்படகுகளை அனுமதிக்கலாம் என்பது குறித்த ஒப்பந்தம் போடுவதாகத்தான் இருக்க முடியும். கச்சத்தீவு மீதான உரிமை கிடைத்தாலும்கூட, இலங்கைக் கடற்பரப்பில் மட்டுமே மீன்வளம் அதிகம் என்பதால், இந்த ஒப்பந்தம் காணப்படாமல் பிரச்னைக்கு முடிவு வராது.
-------------------------------------------------------------------------------------
இதில் இன்னொன்றும் நாம் பார்க்க வேண்டும். 1974-இல் இருந்த படகு எண்ணிக்கையைவிட இப்போதுள்ள படகு எண்ணிக்கை பல ஆயிரம் மடங்கு உயர்ந்துவிட்டது. ராமேஸ்வரம் மீனவர்கள் மட்டுமல்லாமல், நாகை, காரைக்கால் மீனவர்கள்தான் அதிகமான படகுகளில் செல்கிறார்கள். அதே கடற்பரப்பு, அதே மீன்வளம், ஆனால் பல்லாயிரம் படகுகள். இந்தப் படகுகள் பலவும் அரசியல் புள்ளிகளுக்கும், அவர்களது உறவினர்கள், பினாமிகள், ஆதரவாளர்களுக்கும் சொந்தமானவை. அவர்களும், மீன்பிடித் தொழில், மீன் ஏற்றுமதி என்று பல கோடி ரூபாய் லாபம் ஈட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
-------------------------------------------------------------------------------------------
இந்தப் படகு முதலாளிகள் ஒருநாளும் கடலுக்குள் சென்று வலைவீசியவர்கள் அல்ல. துப்பாக்கித் சூட்டில் சாகிறவன் மட்டும் மீனவன். ஒருவேளைக் கஞ்சிக்காக, அலைகடல்மேலே அலையாய்க் கிடந்து உயிரைக் கொடுப்பவர்கள் அவர்கள்தான். முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் அதுதான் அவர்கள் வாழ்க்கை.